Last Updated : 08 Jul, 2019 11:49 AM

 

Published : 08 Jul 2019 11:49 AM
Last Updated : 08 Jul 2019 11:49 AM

மத்தியப்பிரதேசத்தில் பசு கடத்தலில் ஈடுபட்டதாக 24 பேரை சங்கிலியில் பிணைத்து கோமாதாவுக்கு ஜே என சொல்லவைத்த கும்பல்

மத்தியப்பிரதேசத்தில் பசுக்களை கடத்தியதாகக் கூறி 24 பேரை கும்பல் ஒன்று சங்கிலியால் பிணைத்து சாலையில் அமரவைத்து 'கோமாதாவுக்கு ஜே' என முழங்கச் செய்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் சாவலிகேடா என்ற கிராமத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பிடிஐ செய்தியின்படி, மத்தியப் பிரதேசத்திலிருந்து மகாராஷ்டிராவில் நடைபெறும் கால்நடை சந்தைக்கு ஒரு வேனில் பசுமாடுகளை ஏற்றிச் சென்றுள்ளனர். வாகனம் சாவலிகேடா எனும் கிராமத்திற்குள் வந்தபோது அந்த வேனை 100-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்துள்ளது. வேனில் 20 பசுமாடுகள் இருக்க அது குறித்து அந்த கும்பல் வினவியுள்ளது. வேனில் இருந்தவர்கள் அது தங்களின் சொந்த மாடுகள் என்றனர். ஆனால், அதற்கான ஆவணங்களைக் கொடுக்க இயலாததால் வாகனத்திலிருந்தவர்களை இறக்கி அவர்களை சங்கிலியால் பிணைத்துள்ளனர். அனைவரையும் சாலையில் முழங்காலிட வைத்து கோமாதாவுக்கு ஜே என முழங்க வைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கால்வா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த மே மாதம் ஆட்டோவில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக இரண்டு ஆண்கள் மரத்தில் கட்டிவைத்து உதைக்கப்பட்டனர். அவர்களுடன் வந்த பெண்ணையும் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்துடன் ஒரு கும்பல் அடித்துத் துன்புறுத்தியது. இந்நிலையில் ம.பி.யில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷிவ்தயாள் சிங் கூறும்போது, "வேனில் வந்தவர்கள் அதிலிருந்து கால்நடைகள் தங்களுடையது எனக் கூறுகின்றனர். ஆனால், அவர்களிடம் ஆவணம் எதுவுமில்லை. அதனால் அவர்களை மத்தியப் பிரதேச கோவன்ஷ் வத் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். அவர்களை சங்கிலியால் கட்டி துன்புறுத்தியதாக கூறப்படுவது தொடர்பாக இதுவரை யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

பசு பாதுகாவலர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளான 24 பேரும் காண்ட்வா, ஷேஹோர், தேவாஸ், ஹர்தா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 6 பேர் முஸ்லிம்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பசு பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இது நிறைவேறினால், இந்த சட்டத்தின்படி பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு 6 முதல் 5 வருடங்கள் வரை தண்டனையும், ரூ.50000 அபராதமும் விதிக்கப்படும். இத்தகைய சூழல் பசுக் கடத்தலில் ஈடுபட்டதாக 24 பேர் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x