Published : 04 Jul 2019 12:00 AM
Last Updated : 04 Jul 2019 12:00 AM
ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் உள்ளாட்சி இடைத்தேர்தல் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இதன்படி 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 29 இடங்களுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 6 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர காங்கிரஸ் 8, பாஜக 2, சுயேச்சைகள் 5 பேர் என 15 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஓரிடத்தில் மட்டுமே வென்றுள்ளது. எஞ்சிய ஓரிடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
22 மாவட்டங்களில் 48 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் 12 பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உதய்பூர் மாவட்டத்தின் ஜாதோல் ஊராட்சி ஒன்றியத்துக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அந்த இடம் தொடர்ந்து காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போதைய வெற்றியால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நம்பிக்கை அதிகரிப்புமாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான சச்சின் பைலட் கூறும்போது, “காங்கிரஸ் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை எங்கள் அரசு நிறைவேற்றி வருகிறது. அரசின் கொள்கைகளால் மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். வெற்றிக்கு பாடுபட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT