Published : 10 Jul 2019 05:02 PM
Last Updated : 10 Jul 2019 05:02 PM

‘அமேதியை விட்டு விலக மாட்டேன்’ -  தொண்டர்களிடம் ராகுல் காந்தி உருக்கம்

அமேதியுடன் எனது தொடர்பு தனிப்பட்டது, அரசிலுக்கு அப்பாற்பட்டது, அமேதியை விட்டு ஒருபோதும் விலகிச் செல்ல மாட்டேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொண்டர்களிடம் உருக்கமுடன் கூறினார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு அமேதி தொகுதிக்கு இன்று முதல் முறையாக ராகுல் காந்தி சென்றார்.

இந்த பயணத்தின்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், காங்கிரஸ்  வாக்குச்சாவடி பிரதிநிதிகள் உள்ளிட்டோரை முதல்கட்டமாக சந்தித்து பேசினார்.

தனது தோல்விக்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு அவர் நிர்வாகிளை சந்தித்து பேச விரும்பியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொண்ட சில நிர்வாகிகள் ராகுல் காந்தியிடம் பேச முடியாமல் அழுதனர். அவர்களை ராகுல் தேற்றினார்.

தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:

‘‘அமேதியுடன் எனது தொடர்பு தனிப்பட்டது. வெறும் அரசியல் மட்டுமல்ல. அரசியல் வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் வருவது இயல்பு தான். ஆனாலும் அமேதியை விட்டு விலக மாட்டேன். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை மீண்டெழச் செய்ய நீண்ட போராட்டத்துக்கு தொண்டர்கள் தயாராக வேண்டும்’’ எனக் கூறினார்.

ராகுல் காந்தி கூட்டதில் பங்கேற்க 1200 காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு 15 ஆயிரம் பேர் திரண்டனர். முன்னாக அண்மையில் உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி கங்கா பிரசாத் குப்தா வீட்டுக்குச் சென்ற ராகுல் காந்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x