Published : 11 Jul 2019 07:31 PM
Last Updated : 11 Jul 2019 07:31 PM
விவசாயிகளின் ‘தீராத் துயரங்கள்’ பற்றி லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, லட்சம் கோடிக்கணக்கான ரூபாய்கள் அளவில் கடன் சலுகை, மற்றும் பிற சலுகைகள் பணக்கார தொழிலதிபர்களுக்கு வழங்கப்படுகிறது, விவசாயிகளை அவர்களை விட தாழ்ந்தவர்களாகவே இந்த அரசு கருதுகிறது என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் ராகுல் காந்தியின் இந்த தாக்குதலுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இத்தனையாண்டுகால முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் விவசாயிகளின் துயரங்களுக்குக் காரணமே தவிர பாஜக ஆட்சியல்ல, பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு செய்ததை விட வேறு எந்த பிரதமரும் இதுவரை செய்ததில்லை என்று கூறினார்.
கேள்வி நேரத்தில் சுருக்கமாக பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு இந்த அரசு என்ன செய்து விட்டது? தொழிலதிபர்களுக்கு ரூ.4.3 லட்சம் கோடி வரை சலுகைகள், ரூ.5.5 லட்சம் கோடி வரை கடன் தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பணக்கார தொழிலதிபர்களை விட விவசாயிகள் தாழ்ந்தவர்கள் என்று அரசாங்கம் கருதுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
ராஜ்நாத் சிங் பதில்:
விவசாயிகள் நிலைமை இந்த ஓன்று, இரண்டு 4 ஆண்டுகளில் சீரழிந்து விடவில்லை. இந்த நாட்டை நீண்ட காலம் ஆண்டவர்கள்தான் அவர்களின் இந்த நிலைமைக்குப் பொறுப்பேற்க வேண்டும். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பிரதமர் மோடி அதிகரித்த அளவுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வேறு ஒருவரும் அதிகரித்ததில்லை, என்று ராஜ்நாத் பதிலளித்தார்.
ராகுல் காந்தி பேசும்போது, வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத விவசாயிகள் தங்கள் வாழிடங்களிலிருந்து அகற்றப்படுகின்றனர். இதனால் கேரளாவில் மட்டும் 18 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மோடி விவசாயிகளுக்கென நிறைய வாக்குறுதிகளை அளித்துள்ளார், அரசு அவற்றை நிறைவேற்றிட வேண்டும், என்றார்.
ராகுல் காந்தி தன் பேச்சை நிறைவு செய்த பின் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகா, கோவாவில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பாஜகதான் காரணம் என்று கூறி பிரச்சினையைக் கிளப்ப முயன்றனர், ஆனால் சபாநாயகர் இதற்கு அனுமதியளிக்கவில்லை என்பதால் வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT