Published : 17 Aug 2017 09:51 AM
Last Updated : 17 Aug 2017 09:51 AM
‘‘காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல்களைச் சமாளிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மற்றும் போலீஸாருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன’’ என்று சிஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் ஆர்.ஆர்.பட்நாகர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் தூண்டுதலால், பாதுகாப்புப் படையினர் மீது இளைஞர்கள் அடிக்கடி கல்வீச்சில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த சிஆர்பிஎப் வீரர்களின் மனைவி களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீநகரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சிஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் பட்நாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் கல்வீச்சை சமாளிக்க சிஆர்பிஎப் மற்றும் போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்வீச்சின் போது வியூகம் அமைத்தல், பயிற்சி, புதிய செயல்திட்டத்துக்கான விதிமுறைகள் ஆகியவை இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் வியூகம் அமைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விரைவில் இதன் பலனைப் பார்க்கலாம்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. காஷ்மீர் போலீஸ் - ராணுவம் - சிஆர்பிஎப் இடையே சிறந்த ஒத்துழைப்பு காணப்படுகிறது. அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுகின்றனர். இது இனிவரும் காலங்களிலும் தொடரும்.
இவ்வாறு பட்நாகர் கூறினார்.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT