Published : 22 Aug 2017 04:53 PM
Last Updated : 22 Aug 2017 04:53 PM

தலாக் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது: மோடி, பல்வேறு தலைவர்கள் கருத்து

முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்ட அங்கீகாரமற்றது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

தலாக் தீர்ப்பு பற்றித் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ''தலாக் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இது முஸ்லிம் பெண்களின் சமத்துவத்தையும், அவர்களின் சக்தியையும் வலுப்படுத்தும் நடவடிக்கை'' என்று கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷா

தலாக் தீர்ப்பின் மூலம் முஸ்லிம் பெண்களின் பெருமை மற்றும் சமத்துவத்துக்கான புதிய சகாப்தம் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களின் உரிமைகளுடைய விரிவாக்கத்துக்கான தொடக்கம் இது. இதை பாஜக வரவேற்கிறது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். முஸ்லிம் பெண்களுக்கான நீதி இதன் மூலம் நிலை நாட்டப்படும்.

காங்கிரஸ்

இந்த தீர்ப்பை வரவேற்பதாக காங்கிரஸ் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரன்தீப் சுஜரேவாலா தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளது. அத்துடன் தன்னிச்சையான மற்றும் உடனடிமுத்தலாக் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புகழ்ந்துள்ள கிரண் பேடி அதுதொடர்பான ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ''சட்டமன்றக் குழு என்ன செய்ய வேண்டும் என்றும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு எப்படி நியாயம் வழங்குவது என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் உரிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது'' என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x