Published : 09 Jul 2017 05:51 PM
Last Updated : 09 Jul 2017 05:51 PM
கலவரம் பாதித்த மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், படூரியா பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த வாரம் ஒரு மதத்தினரின் புனிதத் தலம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து முகநூலில் வெளியானதை அடுத்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் படூரியா பகுதியில் மதக்கலவரம் வெடித்தது. இது அருகே உள்ள பசீர்ஹத், ஸ்வரூப் நகர், தேகங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியது.
வாகனங்கள் எரிக்கப்பட்டதுடன், வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. தெருக்களில் பொதுமக்களின் நடமாட்டம் வழக்கம்போல் காணப்படுகிறது. கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘படூரியா, ஸ்வரூப் நகர், தேகங்கா, பசீர்ஹத் உள்ளிட்ட பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கடந்த 36 மணி நேரத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார்.
அங்கு இயல்பு நிலை திரும்பினாலும் இணைய தள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. மதக்கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT