Last Updated : 08 Jul, 2017 10:27 AM

 

Published : 08 Jul 2017 10:27 AM
Last Updated : 08 Jul 2017 10:27 AM

முதல்வர் பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜராக மறுப்பு

முதல்வர் பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கோரியபடி உதவ முடியாது என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மறுத்துள்ளார். இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரலை இந்த வழக்கில் உதவும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள் ளது.

ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ கே.பாண்டிய ராஜன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக சட்டசபையில் 18.2.2017 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமி அணி ஆதரவு 122 - எதிர்ப்பு 11 என்ற வாக்கு கணக்கில் வெற்றிபெற்றது. அதிமுக எம்எல்ஏ-க்கள் பிப்ரவரி 8-ம் தேதியில் இருந்து கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டு பணம், பரிசுகள் கொடுத்தும் குண்டர்கள் மூலமும் மிரட்டப்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரம் முன்பு வரை அவர்கள் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். எனவே, கடும் நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றதால் பழனிசாமி அணிக்கு ஆதரவாக வாக்களித்துள் ளனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் முடிவு வேறு விதமாக அமைந்திருக்கும். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். எனவே, எதிர்க்கட்சிகளைக் கூண்டோடு வெளியேற்றிவிட்டு அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற பார்வை யாளர் முன்னிலையில் புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த சபா நாயகருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

ஓபிஎஸ் அணிக்கு ஆலோசனை

இம்மனு கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் புதிய அட்வகேட் ஜெனரல் கே.கே.வேணுகோபாலை இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ‘அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு நான் ஏற்கெனவே சட்ட அறிவுரைகள் வழங்கியுள்ளதால், இந்த வழக்கில் நான் நீதிமன்றத்திற்கு உதவ விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘நீங்கள் இந்த வழக்கில் இருந்து விலக விரும்புவதை சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம் தெரிவியுங்கள். இந்த வழக்கில் அவரை நீதிமன்றத்திற்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x