Published : 27 Jul 2017 08:07 AM
Last Updated : 27 Jul 2017 08:07 AM
‘இந்து சர்க்கார்’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை மையமாக வைத்து ‘இந்து சர்க்கார்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் மதூர் பண்டார்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே சஞ்சய் காந்தியின் மகள் என தன்னைக் கூறிவரும் பிரியா சிங் பால் என்பவர், ‘இந்து சர்க்கார்’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 24-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிரியா சிங் பால் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பிரியா சிங் பால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டபோது, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ‘இந்து சர்க்கார்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்” என்று கோரினார்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறியபோது, “இந்த வழக்கின் தன்மை குறித்து முதலில் ஆராயப்பட்டு, அதன்பின்னரே இது அவசர வழக்கா, சாதாரண வழக்கா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தனர். வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறித்து நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
‘இந்து சர்க்கார்’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் மதூர் பண்டார்கர் கூறியபோது, “படத்துக்கு இந்த அளவுக்கு பிரச்சினை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. இது ஒரு திரைப்படம் மட்டுமே. அந்த கோணத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். போராட்டங்கள், வழக்குகளைக் கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT