Last Updated : 07 Jul, 2017 09:24 AM

 

Published : 07 Jul 2017 09:24 AM
Last Updated : 07 Jul 2017 09:24 AM

இந்தியாவில் நதிகளை இணைப்பது சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும்: ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை

இந்தியாவைப் பொறுத்தமட்டில், நதிகளை இணைப்பது சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டிருந்த அக்கறையை வெளிப்படுத்தும் புத்தகம் ஒன்றை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார். அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான ‘தி இந்து’ மையம் சார்பில் இந்நூல் அறிமுகம் மற்றும் இந்திரா காந்தியின் பசுமைக் கொள்கை குறித்த பொது விவாதம் மியூசிக் அகாடமியில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நேற்று நடந்தது.

நூல் குறித்து சுற்றுச்சூழல் பாது காவலர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் நந்திதா கிருஷ்ணா நடத்திய விவாதம் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘இந்து’ என்.ராம் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பதில்கள் பற்றிய விவரம் வருமாறு:

இந்தியாவில் 20 ஆண்டுகள் பிரதம ராக இருந்த இந்திரா காந்தி அரசியல் ரீதியாக துர்க்கைக்கு இணையாக விமர் சிக்கப்பட்டவர். ஆனால், அவரது துணிச்ச லான அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை மீது அவர் கொண்டிருந்த அக்கறை பெரும்பான்மை மக்கள் அறிந்திராத விஷயம். அதை வெளிப்படுத்தும் விதமாக இந்த நூலை எழுதி உள்ளேன்.

வன பாதுகாப்புச் சட்டம்

இன்றைக்கு நாட்டில் இயற்கை, வனம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உள்ள வன பாதுகாப்புச் சட்டம், வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம், மத்திய நீர் பாதுகாப்புச் சட்டம், மத்திய காற்று மாசு தடுப்புச் சட்டம் ஆகியவை அனைத்தும் இந்திரா காந்தி காலத்தில் இயற்றப்பட்டவை. முண்டந் துறை களக்காடு உள்ளிட்ட முக்கிய வனச்சரணாலயங்கள் அவரது காலத்தில் அமைக்கப்பட்டவை. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்று கருதப்பட்ட பல திட்டங்களை அப்போதைய முதல்வர்களுடன் போராடி தடுத்துள்ளார்.

அப்போதெல்லாம் புலிகளைச் சுட்டுக் கொல்வதற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்து புலிகள் பாதுகாப்பு, பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியல் தயாரித்து அதில் அழிந்துவரும் வன உயிரினங்களைப் பாதுகாக்க திட்டம் வகுத்தது அவரது காலத்தில் தான். உலக அரங்கிலும், இந்தியாவிலும் வனம் மற்றும் இயற்கை பாதுகாப்பை அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்தது இந்திரா காந்தி தான்.

அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பசுமைப் புரட்சியால் அதிக அளவில் உரம் பயன்படுத்தப்பட்டு நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது என்ற வாதத்தை ஏற்க முடியாது. அன்றைக்கு பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு நாட்டு மக்கள் வாரம் ஒருநாள் பட்டினி கிடக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அந்த அளவுக்கு மோசமாக இருந்த நிலையை பசுமைப் புரட்சி மாற்றியது.

உணவு உற்பத்தியை அதிகரிக்க எடுத்த முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. அதன்மூலம் ஏற்பட்ட அடுத்த தலைமுறை பாதிப்பு தான் நிலத்திற்கு ஏற்பட்டிருப்பது. அதை சரிசெய்ய வேண்டியது அவசியம். அதற்காக பசுமைப் புரட்சியே தவறு என்பதை ஏற்க முடியாது. நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைப்பது சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

இயற்கை பாதுகாப்பு என்ற பார்வை யில் அந்த திட்டம் ஏற்புடையதல்ல.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

முன்னதாக ‘தி இந்து’ சார்பில் என்.ரவி பேசும்போது, அரசியல் மற்றும் பொது விவாதங்களுக்கு தி இந்து மையம் 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை நடத்திய முக்கிய நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டார். அந்த வரிசையில் தற்போது நடப்பது 21-வது நிகழ்ச்சி என்றும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x