Published : 01 Nov 2013 09:13 AM
Last Updated : 01 Nov 2013 09:13 AM

நாட்டுக்குத் தேவை படேலின் மதச்சார்பின்மை: நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு

சர்தார் வல்லபாய் படேல் பின்பற்றிய மதச்சார்பின்மைதான் இந்தியாவுக்கு இப்போது தேவை, வாக்கு வங்கி மதச்சார்பின்மை தேவையில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசினார்.



குஜராத் அரசு சார்பில் நர்மதா நதிக்கரையில் உள்ள தீவுப் பகுதியான பஹ்ரவுச்சில் இரும்பு மனிதர் படேலுக்கு ரூ.2,500 கோடியில் சிலை அமைக்கப்படுகிறது. சுமார் 600 அடி உயரத்தில் எழுப்பப்பட உள்ள இந்தச் சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இரண்டு மடங்கு பெரியது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா பஹ்ரவுச்சில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நரேந்திர மோடி பேசியது:

பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் பேசியபோது சர்தார் படேல் காங்கிரஸ்காரர், மதச்சார்பற்றவர் என்று குறிப்பிட்டார். நாங்களும் அதைத்தான் கூறுகிறோம். இந்தியாவின் இப்போதைய தேவை படேலின் மதச்சார்பின்மைதான். வாக்கு வங்கி மதச்சார்பின்மை அல்ல.

படேல் மதச்சார்பற்றவர்தான். ஆனால், சோமநாதர் கோயிலை புனரமைத்தபோது அவரது மதச்சார் பின்மை குறுக்கிடவில்லை. அவர் கடைப்பிடித்த மதச்சார்பின்மை நாட்டைப் பிரிக்கவில்லை, ஒன்றிணைத்து வலுப்படுத்தியது. பல்வேறு பகுதிகளை ஒருங்கி ணைத்தபோது மதம், ஜாதி, மொழி என எந்த பாகுபாட்டையும் படேல் பார்க்கவில்லை. அனைத்து சமஸ்தானங் களையும் இந்தியாவோடு இணக்கமாக அவர் ஒன்றிணைத்தார்.

படேல் பொதுவான தலைவர்

ராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி, பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு மதிப்பு மரியாதை அளிக்கிறோம். அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்களா? இல்லையே. அவர்களுக்கு பாஜக மிகுந்த மதிப்பும் மரியாதையும் அளிக்கிறது. கட்சிகளைவிட மேலானது நாடு. நமது நாட்டுக்காக தியாகம் செய்த அனைவரும் போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள்.

படேலை ஒரு குறிப்பிட்ட கட்சியோடு இணைத்து அவருக்கு அநீதி இழைப்பது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. அவரது அளப்பரிய சாதனை இந்திய வரலாற்றோடு தொடர்புடையது.

பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் நாடு ஒன்றுதான். பல்வேறு பாதைகள் இருந்தாலும் இலக்கு ஒன்றுதான். பல்வேறு நிறங்கள் இருந்தாலும் மூவர்ண கொடி ஒன்று மட்டுமே. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம். நமது ஒற்றுமைதான் ஒளிமயமான இந்தியாவுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று மோடி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x