Published : 20 Mar 2017 10:14 AM
Last Updated : 20 Mar 2017 10:14 AM
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்த பொருளாதார முற்றுகைப் போராட்டம் நள்ளிரவு முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் தலைமையிலான அரசு (காங்கிரஸ்), புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாகா கவுன்சில் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பொருளாதார முற்றுகை போராட்டம் தொடங்கியது.
இதன்படி, மாநிலத்தின் 2 முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டுசெல்லப்படுவது தடைபட்டு, அதன் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் நாகா அமைப்பினருக்கும் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், சிறு கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. பிரேன் சிங் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இவர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
இதனிடையே, புதிய அரசுக்கும் நாகா கவுன்சில் பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 130 நாட்களுக்கு மேல் நீடித்த முற்றுகைப் போராட்டம் நள்ளிரவு முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT