Published : 13 Jun 2016 09:08 AM
Last Updated : 13 Jun 2016 09:08 AM

6 நாள் சுற்றுப்பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு புறப்பட்டார் பிரணாப் முகர்ஜி

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கானா, ஐவரிகோஸ்ட் மற்றும் நமிபியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் இருந்து கானா தலைநகரான அக்ராவுக்கு நேற்று புறப்பட்ட பிரணாப் முகர்ஜியை, பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஹமிது அன்சாரி, டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் உள்ளிட்டோர் சம்பிரதாய முறைப்படி வழியனுப்பி வைத்தனர்.

பிரணாப் முகர்ஜியுடன் பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், எம்பி.க்கள் எஸ்.எஸ்.அலுவாலியா மற்றும் மன்சுக் எல் மாண்டாவியா ஆகியோர் சென்றுள்ளனர்.

கானா மற்றும் ஐவரி கோஸ்ட் நாடுகளுக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. நமிபியா நாட்டுக்கும், 21 ஆண்டு இடை வெளிக்குப் பிறகு, முதல்முறையாக இந்திய குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதேபோல், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ள போதிலும், தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக இம்மூன்று நாடுகளுக்கும் செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x