Published : 02 Jun 2016 08:53 AM
Last Updated : 02 Jun 2016 08:53 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் தேர்தல் வெற்றிக்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு மத்தியப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவத்துக்காக வேறொரு ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலை யில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்புர் மாவட்ட ஆட்சியர் சிபி சக்ரவர்த்தி கடந்த மே 19-ம் தேதி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘காங்கிராட்ஸ் அம்மா’ என ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். எனினும் சில மணி நேரங்களில் அப்பதிவு அழிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிபி சக்ரவர்த்திக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டதா எனக் கேட்ட தற்கு, பொதுநிர்வாகத் துறை செயலாளர் ராஷ்மி அருண் ஷமி, “ஆம், சக்ரவர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் விரைவில் பெறப்படும்” என்றார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க சக்ரவர்த்தி மறுத்து விட்டார்.
மத்தியப்பிரதேச பொதுநிர் வாகத் துறை இணையமைச்சர் லால்சிங் ஆர்யா, “சக்ரவர்த்தி விவகாரத்தின் தற்போதைய நிலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.
சில நாட்களுக்கு முன்பு பர்வானி மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் கங்வார், ஃபேஸ்புக்கில் ஜவஹர்லால் நேருவைப் பாராட்டி பதிவிட்டிருந்தார். மேலும், பிரதமர் மோடியை விமர்சித்து வெளியான பதிவு ஒன்றுக்கு விருப்பம் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால், மோடிக்கு எதிராக எந்த பதிவும் இடவில்லை, அது போன்ற பதிவுக்கு விருப்பமும் தெரிவிக்கவில்லை என்றும் கங்வார் மறுப்பு தெரிவித்துள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT