Last Updated : 20 Jan, 2017 10:14 AM

 

Published : 20 Jan 2017 10:14 AM
Last Updated : 20 Jan 2017 10:14 AM

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு: ரிசர்வ் வங்கியிடம் வருமான வரித்துறை புகார்

நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு வங்கி ஊழியர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் புனேவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித் துறையினர் ஆய்வு நடத்தியதில் ரூ.113 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்து ரிசர்வ் வங்கிக்கு வருமான வரித் துறை அனுப்பி உள்ளது.

செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கிக்கு மும்பை, புனே கூட்டுறவு வங்கிகள் கணக்கு காட்டி உள்ளன.

உதாரணமாக, பொதுமக்கள் டெபாசிட் செய்த பணம் ரூ.242 கோடி என்று ரிசர்வ் வங்கியிடம் புனே கூட்டுறவு வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், ஆய்வின்போது கடந்த டிசம்பர் 23-ம் தேதி கணக்குப்படி ரூ.141 கோடிதான் இருப்பு இருந்தது. இதன்மூலம் கூடுதலாக 101.07 கோடிக்கு பழைய நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு கூட்டுறவு வங்கி கணக்கு காட்டி உள்ளது. இதேபோல் மும்பை கூட்டுறவு வங்கி ரூ.11.89 கோடிக்கு பழைய நோட்டுகளை அதிகமாக கணக்கு காட்டி உள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறையினர் கூறும்போது, ‘‘கணக்கு காட்ட முடியாத அளவுக்கு புதிய நோட்டுகளுக்கும் பழைய நோட்டுகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இதன்மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சி நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது’’ என்றனர்.

பழைய நோட்டுகளை வங்கி களில் மாற்றிக் கொள்ள டிசம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் அளித்தது. இந்நிலை யில், ரிசர்வ் வங்கியிடம் அதிகமாக பழைய நோட்டுகளை கணக்கு காட்டி, டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகும் பழைய நோட்டுகளை (கறுப்புப் பணம்) புதிய கரன்சிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தனைக்கும் டிசம்பர் 30-ம் தேதி வரை பொதுமக்கள் செலுத்திய பழைய நோட்டுகளை மறுநாளே டெபாசிட் செய்யும்படி எல்லா வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x