Published : 26 Sep 2016 07:58 PM
Last Updated : 26 Sep 2016 07:58 PM
நாடு முழுவதும் வேளாண் மகசூலை அதிகரிக்க அறிவியில் ரீதியிலான தீர்வை கண்டறிய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) பவள விழா டெல்லியில் நடந்தது. இதில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஒரு துளி நீரில் கூடுதல் பயிர்கள் விளைவிக்க வேண்டும் என திரும்ப, திரும்ப கூறி வருகிறேன். ஒரு அங்குல நிலத்தில் பன்மடங்கு பயிர்கள் விளைவிப்பது குறித்து நாம் நிச்சயம் சிந்தித்தாக வேண்டும். 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தை சார்ந்தது. இந்த நூற்றாண்டில் இந்தியாவின் தேவைகள் அனைத்தையும் அறிவியில் தீர்வு மூலமே நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சாமான்ய மனிதர்களையும் அறிவியலோடு இணைக்க வேண்டும்.
நவீன இந்தியாவின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் சி.எஸ்.ஐ.ஆர் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுவதை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கின்றனர். 75 ஆண்டுகளாக நாட்டு நலனுக்காக பாடுபட்டது போல வருங்காலங்களிலும் சி.எஸ்.ஐ.ஆர் தொடர்ந்து பாடுபடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT