Last Updated : 31 Jan, 2014 10:36 AM

 

Published : 31 Jan 2014 10:36 AM
Last Updated : 31 Jan 2014 10:36 AM

மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டி- ஆ.ராசாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த முடிவு

மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.

அந்தக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. டெல்லி முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தலைமை வகித்தார்.

கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் கேஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரையும் பொதுமக்கள் வேறு வழியின்றி ஊழல் மற்றும் கிரிமினல் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து வந்தார்கள். இப்போது அவர்கள் முன் நாம் ஒரு நல்ல மாற்று வழி ஏற்படுத்தி தந்து இருக்கிறோம். இனி சுத்தமான அரசியலை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடும். குறிப்பாக பல்வேறு கட்சிகளில் ஊழல் மற்றும் கிரிமினல்களின் சின்னமாக இருக்கும் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடுவோம். இந்தவகையில், 162 எம்பிக்கள் மீது கிரிமினல் வழக்குகளும் 73 எம்பிக்கள் மீது மிகக் கொடுமையான குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன. இவர்கள் அனைவரையும் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்த கட்சி முயலும்

2ஜி ஊழல் வழக்கில் சிக்கிய ஆ.ராசா உட்பட 15 மத்திய அமைச்சர்களையும் எதிர்த்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றார், அரவிந்த் கேஜ்ரிவால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x