Published : 10 Nov 2014 09:32 AM
Last Updated : 10 Nov 2014 09:32 AM
பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தால், அந்நாட்டுடன் பேச்சு நடத்த முடியாது என்று இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது: பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்த விதி மீறலில் ஈடுபட்டால், அது பேச்சு நடத்துவதற்குரிய சூழ்நிலையை சீர்குலைத்துவிடும்.
பேச்சு நடத்த வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். அதற்கான சூழ்நிலையை இரு நாடுகளும் சேர்ந்துதான் ஏற் படுத்த வேண்டும். அதில், ஒரு தரப்பு மட்டும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டு, பேச்சு ஏன் நடைபெறவில்லை என்று கேட்பது எப்படி சரியாக இருக்கும்.
பாஜக ஆட்சிக்கு வந்ததும் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை செயலாளர்கள் நிலையி லான பேச்சுவார்த்தைக் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால், பாகிஸ்தானோ, பிரிவினைவாதிகளுடன் பேச்சு நடத்தியது. விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடைபெறவிருந்த சூழ்நிலையில் அவர்கள் இச்செயலில் ஈடுபட்டனர். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
காஷ்மீரில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்று நம்புகிறோம்.
சமீபத்தில் அந்த மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது, நமது ராணுவம் துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டது.
சீனாவுடன் பேச்சு
சீனாவுடனான நமது வர்த்தக உறவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் பரஸ்பரம் முதலீடுகள் அதிகரித் துள்ளன. மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.
ஆனால், எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண கடந்த 2003-ம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணை யம் விரைந்து செயல்பட்டு தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது. சீனாவுடன் ஆக்கபூர்வமான பேச்சு நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT