Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

சர்ச்சையில் சிக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி மாவட்ட ஆட்சியர் கொடலா கிரண்குமாரை கைது செய்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஐபிஎஸ் அதிகாரியான கே.ஜெய ராமன். தமிழரான இவர் நேர்மை யான அதிகாரி என அம் மாநிலத்தில் பெயர் எடுத்தவர்.

இதுகுறித்து, ஜெயராமன் கூறுகையில், ‘பொதுநலனுக்காக நான் செய்த கைது, விதிகளுக்கு உட்பட்டது. இதற்காக நான் வருந்த வில்லை. இதற்கான விளக்கத்தை பிறகு கூறுகிறேன். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடக்கும். அதில் எந்த சிக்கலும் இருக்காது’ என்றார்.

கடந்த ஆகஸ்ட் 2011 முதல் சிலிகுரி ஜல்பைகுரி மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது கொடலா கிரண்குமார் மீது ஊழல் புகார் எழுந்தது. நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான டெண்டரில் பணி முடியும் முன்பாக பில் தொகையை வழங்க குமார் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த புகார் காரணமாக, மால்டா மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்ட குமாருக்கு எதிராக கடந்த சனிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய ஜெயராமன் உத்தரவிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் தர்ம சங்கடத்துக்குள்ளான மேற்கு வங்க காவல்துறை தலைமை, ஜெயராமனை சிலிகுரி காவல்துறை ஆணையர் பதவியிலிருந்து உடனடி யாக மாற்றியது.

தற்போது, இவர் கொல்கத்தா தலைமை காவல் நிலையத்தின் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சர்ச்சைக்கு பிறகும் ஜெயராமனுக்கு பொதுமக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது.

இதுபற்றி கொல்கத்தா வாழ் தமிழர்கள் சிலர், தி இந்து நாளிதழிடம் கூறியது: ‘வேலூரைச் சேர்ந்த ஜெயராமன், விமானப்படையில் பணியாற்றிய வர். பணியிலிருந்த படியே படித்து 1995-ல் ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு மேற்குவங்கம் கேடர் கிடைத்தது. சிறிய ஊழலையும் பொறுத்துக் கொள்ளாத இவர், அடிக்கடி பணி யிட மாற்றம் செய்யப்பட்டார். ஐந்து மாதங்களுக்கு முன்பு, சாரதா சீட்டு நிறுவன மோசடி தொடர்பாக ஒரு அரசியல்வாதியை துணிச்சலாக கைது செய்தார் இந்த டிஐஜி ரேங்கி அதிகாரி’ என்றனர். பணிகளுக்கு இடையே எம்.ஏ. தமிழ் படித்து பட்டம் பெற்றவர் ஜெயராமன் எனவும், தமிழ் உணர்வாளரான அவரது பிள்ளைகளுக்கு மன்னவன், தென்னவன் மற்றும் குந்தகை எனப் பெயரிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இவர், சிபிஐ எஸ்.பி.யாக சென்னையிலும் சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஆந்திரத்தைச் சேர்ந்த குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குமாரைக் கைது செய்ய உயர் அதிகாரியிடம் அனுமதி பெறவில்லை என்பது அரசுத் தரப்பு வாதம். ஆனால், வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு அனுமதி பெறத் தேவையில்லை என ஜெயராமன் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x