Published : 06 Apr 2017 01:06 PM
Last Updated : 06 Apr 2017 01:06 PM
புதிய ரூ.2000 கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ரூ.500 நோட்டுகளிலும் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.
குறிப்பாக 17 எல்லையோர மாநிலங்களில் சுமார் 12,000, ரூ.500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான கள்ள நோட்டுகள், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவை தரம் குறைந்தவையாக இருந்தன.
நவம்பர் 8-ம் தேதி அன்று, பிரதமர் மோடி ரூ.1000 மற்றும் 500 நோட்டுகளின் மதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தார்.
அப்போதில் இருந்து இன்று வரை 40,905 ரூ.2000 மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன. இவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர், தேசிய புலனாய்வு முகமை மற்றும் காவல்துறையினர் 17 எல்லையோர மாநிலங்களில் பிடித்துள்ளனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் வங்கதேச எல்லையில் மேற்கு வங்கம் மற்றும் அஸாம் பகுதிகளில் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். தேசிய புலனாய்வு முகமை ரூ.4.5 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தது. அதில் குஜராத்தில் பிடிபட்ட 22,479 நோட்டுகளும், மேற்கு வங்கத்தில் பிடிபட்ட 198 நோட்டுகளும் அடக்கம்.
காவல்துறை குஜராத்தில் ரூ.1.2 கோடி, மேற்கு வங்கத்தில் ரூ.23 லட்சம் மற்றும் பஞ்சாப்பில் ரூ.44 லட்சம் மதிப்புடைய நோட்டுகளைப் பறிமுதல் செய்தது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT