Published : 29 Dec 2013 11:12 PM
Last Updated : 29 Dec 2013 11:12 PM

மத்திய அரசு முடங்கிவிட்டது: மோடி குற்றச்சாட்டு

மத்திய அரசு செயலற்று முடங்கி விட்டது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது மக்களவைத் தேர்தலுக்கு இப்போதே அவர் தயாராகிவிட்டார்.

பாஜக சார்பில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஞாயிற்றுக் கிழமை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்காக நாடாளு மன்ற கட்டிட வடிவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை விமர்சித்தார். அவர் கூறியதாவது:

பழங்காலத்தில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது. அப்போது வானத்தில் இருந்து அவ்வப்போது அசரீரி ஒலிக்கும்.

காங்கிரஸில் இப்போது ஒரு அசரீரி ஒலிக்கிறது. அந்த குரலுக்குச் சொந்தக்காரர், ஊழல் குறித்து வெற்று வார்த்தைகளை அள்ளி வீசி வருகிறார். ஊழலைத் தடுக்க முதல்வர்கள் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இதில் வேடிக்கை என்னவென் றால் ஊழலில் மூழ்கித் திளைக்கும் அவர்களே ஊழலைக் குறித்து விமர்சிக்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையென்றால் ஜார்க்கண்டில் ஊழல் விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கு யார் காரணம்? அதற்கு அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

நாடு தற்போது எதிர்கொண் டிருக்கும் அனைத்துப் பிரச்சினைக ளுக்கும் மத்திய அரசுதான் காரணம். மக்களுடனான தொடர்பை மத்திய அரசு முழுமையாக இழந்துவிட்டது.

மக்கள் பிரிவினையை விரும்பவில்லை, வளர்ச்சியை விரும்புகிறார்கள். அரசியல் சந்தர்ப்ப வாதங்களை விரும்ப வில்லை, வளர்ச்சிக்கான வாய்ப்புக ளைத் தேடுகிறார்கள். மதவாத விஷத்தை விரும்பவில்லை, பாதுகாப்பை விரும்புகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அதன் அரசுகளும் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க மறுக்கின்றன.

பிரதமர் மீது குற்றச்சாட்டு

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய அரசு நடத்தியது. அப்போது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 62 அம்சங்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசிடம் அளித்தேன். 20 செயல் திட்டங்களைப் பரிந்துரைத்தேன்.

அவற்றை பெற்றுக் கொண்ட பிரதமர், மிகச் சிறந்த பரிந்து ரைகளை அளித்திருப்பதாக பாராட்டு தெரிவித்தார். அதன் பின்னர் இரண்டரை ஆண்டு கள் உருண்டோடி விட்டன. விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த பிரதமர் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மத்திய அரசும் முற்றிலுமாக செயலற்று முடங்கி விட்டது.

14 தொகுதிகளும் பாஜகவுக்கே…

ஜார்க்கண்டின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் இதனை தனி மாநிலமாக உருவாக்கினார். இந்த மாநிலத்தில் இயற்கை வளங்கள் நிறைந்து உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி யிருந்தால் மாநிலம் எப்போதோ முன்னேறியிருக்கும்.

ஆனால் ஜார்க்கண்ட் இன்னமும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு யார் காரணம்? இந்த நாட்டையும் மாநிலத்தையும் நீண்ட காலமாக ஆண்டு கொண்டி ருப்பவர்கள் பதில் அளிப்பார்களா?

ஜார்க்கண்ட் மாநிலம் உருவானபோது தோன்றிய சத்தீஸ்கர், பாஜக ஆட்சியில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் 13 ஆண்டுகளாகியும் ஜார்க்கண்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மாநில மக்களின் கோரிக்கைகளை டெல்லியில் வசிக்கும் சுல்தான்கள் கேட்க மறுப்பதுதான் அதற்குக் காரணம்.

வரும் மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்டின் 14 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் நரேந்திர மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x