Published : 11 May 2017 08:36 PM
Last Updated : 11 May 2017 08:36 PM

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் மே 15-ல் விசாரணை தொடக்கம்: சர்வதேச நீதிமன்றம் அறிவிப்பு

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 15-ம் தேதி தொடங்கும் என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஈரானின் சாபஹர் துறைமுகத்தில் வர்த்தகம் செய்து வந்தார். அவரை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் ரா உளவு அமைப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டி கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

எந்தநேரமும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை 10-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி ரோன்னி ஆபிரஹாம், ஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தார். இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 15-ம் தேதி தொடங்கும். இந்த விசாரணை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் இந்திய தரப்பு தனது வாதத்தை எடுத்துரைக்கலாம். இரண்டாம் கட்டத்தில் பாகிஸ்தான் தரப்பு தனது வாதங்களை முன்வைக்கலாம். இந்த விசாரணை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குல்பூஷண் ஜாதவ், ‘ரா’ அமைப்பின் உளவாளி இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதை பாகிஸ்தான் ஏற்கவில்லை. மேலும் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஜாதவின் உறவினர்கள் அவரை சந்திக்கவும் அனுமதி மறுத்து வருகிறது. ஜாதவ் தொடர்பான வழக்கு ஆவணங்கள் தீர்ப்பு நகலையும் இதுவரை வழங்கவில்லை.

எவ்வித உறுதியான ஆதாரங்களும் இல்லாமல் ராணுவ நீதிமன்றம் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. எனவே சர்வதேச நீதிமன்ற விசாரணை பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று இந்திய சட்ட நிபுணர்கள், வெளியுறவு துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x