Published : 11 Sep 2016 11:51 AM
Last Updated : 11 Sep 2016 11:51 AM

ஆந்திர சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு கண்ணீர்

ஆந்திர சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. அப்போது கடந்த கால அனுபவங்களை நினைவுகூர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு திடீரென உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வடித்தது அனைவரையும் நெகிழவைத்தது.

ஆந்திர மாநிலத்தின் தற்காலிக தலைநகரமாக செயல்பட்டு வரும் ஹைதராபாத்தில் உள்ள சட்டப்பேரவையில் கடந்த 3 நாட்களாக சபாநாயகர் கோடல சிவப்பிரசாத் தலைமையில் பேரவைக் கூட்டம் நடந்தது.

இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத் தொடர் இனி புதிய தலைநகரான அமராவதியில் நடக்கும் என்றும் ஹைதராபாத்தில் நடப்பது இதுவே கடைசி கூட்டம் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மூத்த உறுப்பினர்கள் பலர் உரையாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது ஹைதராபாத் சட்டப்பேரவையில் பணியாற்றிய கடந்த கால அனுபவங்களை உறுப்பினர்களுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இந்தப் பேரவையில் இருந்தபடி ஆந்திராவின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றியதை நினைவுகூர்ந்த அவர், இதுவே இங்கு நடக்கும் கடைசிக் கூட்டத் தொடர் என நினைக்கும்போது மனம் மிகவும் கனக்கிறது என கண்ணீர் சிந்தியபடி பேசினார். இதனால் பேரவையில் இருந்த உறுப்பினர்கள் மத்தியில் சற்று நேரம் மவுனம் நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x