Last Updated : 01 Oct, 2014 09:45 AM

 

Published : 01 Oct 2014 09:45 AM
Last Updated : 01 Oct 2014 09:45 AM

உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 12-ஆக அதிகரிப்பு; 45 பேர் காயம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர், 45 பேர் காயமடைந்தனர். 12 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாரணாசியில் இருந்து கோரக்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரயிலும் லக்னோவில் இருந்து பரூனி நோக்கி சென்று கொண்டிருந்த பரூனி எக்ஸ்பிரஸ் ரயிலும் கோரக்பூரில் இருந்து 7 கி.மி. தொலைவில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 12 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சாக்சேனா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தைத் தொடர்ந்து கோராக்பூர்-வாரணாசி பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சிக்னல் விதிகளை கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் மீறியதால், அவரை ரயில்வே நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில் பாதுகாப்பு ஆணையர் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

ரயில்வே ஹெல்ப்லைன்கள்:

விபத்து குறித்து தகவல் அறிய ரயில்வே நிர்வாகம் தொலைபேசி உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

கோரக்பூர்- (05513303365, 09794846980), லக்னோ- (05222233042), சப்ரா- (09006693233), பெனாரஸ்- (09919041978)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x