Published : 26 Aug 2016 08:26 AM
Last Updated : 26 Aug 2016 08:26 AM
ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதனால் நெகிழ்ச்சி அடைந்த சிந்து, “என் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை” எனக் கூறியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்ஸில் இறகுப் பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு இதுவரை ரூ. 13 கோடி பரிசுத் தொகை மற்றும் விலை உயர்ந்த கார், வீட்டு மனை பட்டாக்கள் போன்றவை பரிசாக வழங்கப்பட்டுள்ளன.
தற்போது ஹைதராபாத்தில் உள்ள சிந்துவைக் காண அவரின் ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள், பிரமுகர்கள் என வரிசை கட்டி காத்திருக்கின்றனர். கடுமையான பணிகளுக்கு இடையே, சுமார் 3 மாதங்கள் கழித்து தனது ட்விட்டர் சமூக வலை தள கணக்கை அண்மையில் பார்த்தார் சிந்து. அதில், தனக்கு ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்து செய்தியை பார்த்து திக்கு முக்காடிப்போனார்.
வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரஜினி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்ததோடு ‘நான் உன் ரசிகனாகி விட்டேன்’ எனவும் குறிப்பிட்டிருந்தார். ரஜினிக்கு சிந்து அளித்த பதிலில், ”மிக்க நன்றி சார், எனக்கு வார்த்தைகளே வரவில்லை. தற்போது என் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து சிந்துவிடம் கேட்டபோது, ‘ரஜினி சாரின் ரசிகை நான். ஆனால் அவர் என்னுடைய ரசிகரானேன் எனக் கூறியிருப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT