Published : 01 Jul 2016 06:55 PM
Last Updated : 01 Jul 2016 06:55 PM
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் டெபாசிட் தொகை 33% சரிவு கண்டதையடுத்து, அங்கிருந்து கருப்புப் பணம் இந்தியாவுக்குள் எவ்வழியாலாவது கொண்டு வரப்பட்டுள்ளதா என்பதை அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசின் வருவாய்ச் செயலர் ஆதியா தெரிவித்தார்.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை குறைந்து வருவது ஆரோக்கியமான ஒன்று என்று தெரிவித்த ஆதியா, கருப்புப் பணத்துக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வேலை செய்யத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
ஆனாலும் அரசும், வருமானவரித்துறையும், தற்போது சுவிஸ் வங்கி இவ்வாறு கூறியுள்ளதையடுத்து அங்கிருந்து கருப்புப் பணம் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளதா என்று சரிபார்த்து வருவதாகக் கூறினார் ஆதியா.
“இந்தியாவுக்குள் அப்பணம் ஊடுருவியிருந்தால் நாங்கள் அதனை தடம் காண தயார் நிலையில் இருக்கிறோம்” என்றார்.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் தொகை ரூ.8,382 கோடியாக குறைந்துள்ளதாக அவ்வங்கி அறிவித்தது. தரவுகளை வெளியிடுவது என்ற முடிவுக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவு இவ்வளவு குறைவாக இருந்ததில்லை என்று சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால் இவை முறையான கணக்குகள் பற்றிய விவரம் என்பது குறிப்பிடத்தக்கது, இதில் கருப்புப் பண விவரங்கள் அடங்காது என்பதையும் சுவிஸ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்துடன் இது குறித்து தாங்கள் மேற்கொண்ட ஆலோசனை பற்றி வருவாய் செயலர் கூறும்போது, “சில நாட்களுக்கு முன்பாக சுவிட்ஸர்லாந்து வருவாய்த்துறை அதிகாரியிடம் உரையாடிய போது 2018-ம் ஆண்டு முதல் இந்தியர்களின் பண நடவடிக்கை குறித்த விவரங்களை தானாகவே வெளியிடுவோம் என்று அவர் கூறினார்.
இதன் பொருள் என்னவெனில், நம் நாட்டு குடிமக்கள் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யும் தொகைகளின் முழு விவரம் நமக்குக் கிடைக்கத் தொடங்கி விடும் என்பதே” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT