Published : 08 Oct 2014 10:19 AM
Last Updated : 08 Oct 2014 10:19 AM

ஒரே குடும்பத்தில் 5 பேர் கொலை: ஓராண்டுக்குப் பின் எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில், பள்ளி இயக்குநர், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் ஓராண்டுக்கு முன்னர் காணாமல் போயினர். இவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டு பள்ளி வளாகத்திலேயே புதைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது. இவர்களின் எலும்புக் கூடுகளை நேற்று போலீஸார் தோண்டி எடுத்தனர்.

கடப்பா தாலுகா, நவீகோட்டை பகுதியில் ஜி.எஸ். தனியார் பள்ளி உள்ளது. இதன் நிறுவனரும், தாளாளருமான ராஜரத்தினத்தின் மகன் கிருபாகரன் இதே பள்ளியின் இயக்குநராக செயல் பட்டு வந்தார். இவரது மனைவி மோனிகா மற்றும் இவர்களது மூன்று குழந்தைகள் கடந்த ஆண்டு திடீரென காணாமல் போயினர். ராஜரத்தினத்தையும் காணவில்லை. மோனிகாவின் தாயார் சுஜாதா அளித்த புகாரின் பேரில் கடப்பா போலீஸார் வழக்கு பதிவு செய்து 6 பேரை தேடி வந்தனர்.

இது தொடர்பாக நேற்று முன் தினம் 5 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி, நேற்று பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த கிருபாகரன், அவரது மனைவி மோனிகா மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன.

சொத்து தகராறு காரணமாக இவர்களை தந்தையே அடிஆட்கள் வைத்து கொன்றதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீ ஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தலை மறைவாக உள்ள ராஜரத்தினத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x