Published : 24 Jul 2016 02:19 PM
Last Updated : 24 Jul 2016 02:19 PM
ரயிலில் உடன் பயணம் செய்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக பிஹார் மாநில பாஜக எம்எல்சி துன்னா ஜி பாண்டே கைது செய்யப்பட்டார்.
ஹவுரா கோராக்பூர் பூர்வாஞ் சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து, 12 வயது சிறுமியின் பெற்றோர் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் அடிப்படையில், பிஹார் மாநில சட்ட மேலவை உறுப்பினர் துன்னா ஜி பாண்டே கைது செய்யப்பட்டதாக முசாஃபர்பூர் ரயில்வே காவல்துறை கண்காணிப் பாளர் பி.என்.ஜா தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் ரயில் ஹாஜிப்பூர் நோக்கி, சரய் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அதிகாலை 3 மணியளவில் ‘ஏசி’ இரண்டாம் வகுப்பு பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்த தங்களின் மகளை, தகாத முறையில் முத்தமிட்டதோடு, தன்னுடன் கழிப்பறைக்கு வருமாறு துன்னா ஜி பாண்டே அழைத்திருப்பதாகவும் சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
துன்னா ஜி பாண்டேவின் தகாத செயல்களால் பயந்துபோன சிறுமி, ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். வேறு பெட்டியில் பயணம் செய்த பெற்றோர் பதற்றத்துடன் ஓடிவந்த போது அவர்களிடம் சிறுமி அழுது முறையிட்டிருக்கிறார்.
இதையடுத்து, ரயிலில் பாது காப்புக்கு வந்த போலீஸாரே துன்னா ஜி பாண்டேவை பிடித்து, ஹாஜிப்பூர் நிலையத்தில் ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்திய தண்டனைச் சட்டம் 354ஏ மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் துன்னா ஜி பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள துன்னா ஜி பாண்டே, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். ‘ஹாஜிப் பூரில் இறங்கவேண்டும் என்பதால், மொபைல் போன் சார்ஜரை, ஸ்விட்ச் போர்டில் இருந்து எடுப் பதற்காக மின் விளக்கை எரிய விட்டேன். அதற்குபோய் அந்த சிறுமி கத்தி களேபரம் செய்து விட்டார். அவர் பையனா, பெண்ணா என்று கூட நான் பார்க்கவில்லை’ என பாண்டே கூறினார்.
துன்னா ஜி பாண்டே, துராகா பூரில் இருந்து ஹாஜிப்பூருக்கு ரயில் டிக்கெட் வைத்திருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், ஹவுராவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூருக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.
சிவான் மாவட்டத்தில் இருந்து உள்ளாட்சி ஒதுக்கீட்டின் கீழ் எம்எல்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துன்னா ஜி பாண்டே, மது வணிகத் தில் ஈடுபட்டிருப்பவர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் ட்விட்டரில் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT