Published : 24 Jun 2017 09:34 PM
Last Updated : 24 Jun 2017 09:34 PM
வேளாண் கடன் வாங்கியுள்ள விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி செய்ய வகை செய்யும் முக்கிய வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தை பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசு சனிக்கிழமை அறிவித்தது.
மும்பையில் சனிக்கிழமை நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தின்போது அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். விவசாயிகளின் கடன் சுமையை தீர்க்க ரூ.34,000 கோடி செலவிடப்படவுள்ளதாக அப்போது அவர் கூறினார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பெயரில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்த அவர், இதன் மூலம் 89 லட்ச விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், அதில் 40 லட்சம் பேர் கடன் சுமையிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, சனிக்கிழமை காலை மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை வழிமறித்து போராடியதால், மும்பை உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு ஏற்பட்டது. வேளாண் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்துக்கு பிற அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தன.
இந்தச் சூழலில் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக விரிவான திட்டம் கொண்டு வரப்படும் என்றும் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ.1.5 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் பட்னாவிஸ் அறிவித்ததால், அவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT