Last Updated : 11 Aug, 2015 12:45 PM

 

Published : 11 Aug 2015 12:45 PM
Last Updated : 11 Aug 2015 12:45 PM

நாட்டின் வளர்ச்சியை தடுக்கவே நாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி காட்டம்

நாட்டின் வளர்ச்சியை முடக்குவதற்காக, சிலர் நாடாளுமன்றத்தை தவறாக பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டிருந்த பாஜக நாடாளுமன்ற குழுவின் இறுதி கூட்டம் இன்று காலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இறுதி நிலையை எட்டியுள்ளது. நாடாளுமன்றத்தை தவறாக பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சியை முடக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சிலர் செயல்பட்டுவருகின்றனர்.

அதேவேளையில், இந்த சதியை அறிந்து கொண்ட சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் போன்ற சில தலைவர்கள் சதி வேலையில் ஈடுபடுபவர்களிடம் இருந்து விலகி நிற்கின்றனர். இதற்காக முலாயம் சிங் யாதவுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்" என்றார்.

பிரதமரின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, "பிரதமர் தனது உரையில் 'சிலர்' எனக் குறுப்பிட்டது காங்கிரஸ் மூத்த தலைவர்களையே" என்றார்.

முன்னதாக நேற்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியினர் வியாபம் ஊழலை முன்வைத்து அமளியில் ஈடுபட்டபோது குறுக்கிட்ட முலாயம், "போதும் நிறுத்துங்கள். இன்னமும் நீங்கள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டால். எங்கள் கட்சியின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது" எனக் கூறி காங்கிரஸ் கட்சியினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், "மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டபோது எங்களுக்கு ஆதரவாக இருந்த முலாயம் தற்போது திடீரென மாற்றிப் பேசுவது அரசரை விட அரசாங்கத்துக்கு சாமானியன் உண்மையுடன் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது" என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x