Published : 09 Oct 2014 12:21 PM
Last Updated : 09 Oct 2014 12:21 PM

பாகிஸ்தான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரும்: ஜேட்லி எச்சரிக்கை

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், 'பாகிஸ்தான் தனது அத்துமீறலை சாகசம் என நினைத்துக் கொண்டு தொடர்ந்தால் இந்திய தரப்பும் சாகசம் செய்ய வேண்டியிருக்கும். அதன் விளைவுகளை பாகிஸ்தான் தாக்குப் பிடிக்க முடியாது' என பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். அவர் கூறியதாவது: "எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என பாகிஸ்தான் விரும்பினால் இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக் கொள்வது நல்லது.

அதைவிடுத்து, பாகிஸ்தான் தனது அத்துமீறலை சாகசம் என நினைத்துக் கொண்டு தொடர்ந்தால் இந்திய தரப்பும் சாகசம் செய்ய வேண்டியிருக்கும். அதன் விளைவுகளை பாகிஸ்தான் தாக்குப் பிடிக்க முடியாது.

இந்தியா பொறுப்புள்ள தேசம், எனவேதான் பாகிஸ்தான்போல் கோரத் தாக்குதலில் ஈடுபடாமல் அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தினரை மட்டும் தாக்கி வருகிறது. அதேவேளையில், இந்திய மக்களை காக்கும் பொறுப்பில் இருந்து எப்போதும் அரசு தவறாது.

எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு இந்திய தரப்பு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் எப்போதுமே போர் நிறுத்த ஒப்பந்தத்தை அத்துமீறுவதை வழக்கமாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறலை நிறுத்தும்வரை அமைத்திப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" என தெரிவித்தார்.

இதற்கிடையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "பாகிஸ்தான் தாக்குதலுக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லை நிலவரம் குறித்து பிரதமர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அதனால், அவர் வாய் திறந்து பாகிஸ்தான் தாக்குதல் குறித்து விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

கடந்த ஒரு வாரமாக இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த திங்கள்கிழமை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்முவின் ஆர்னியா பகுதியில் 5 பேர் கொல்லப்பட்டனர். 34 பேர் காயமடைந்தனர். கடந்த 3-ம் தேதி குல்மார்க், ஜம்மு, பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x