Last Updated : 25 Sep, 2018 05:12 PM

 

Published : 25 Sep 2018 05:12 PM
Last Updated : 25 Sep 2018 05:12 PM

‘சேற்றை வாரி இறைப்பதுதான் ரபேல் ஊழலுக்கான பதிலா?’: பாஜகவை சாடிய காங்கிரஸ்

ரபேல் ஊழலுக்கான பதிலைக் கேட்டால், காங்கிரஸ் கட்சித் தலைவர் குடும்பத்தினரைத் தவறாகப் பேசுவதும், சேற்றைவாரி இறைப்பதும் தான் பாஜகவினர் அளிக்கும் பதிலா என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் அரசு நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனத்துக்குக் கொடுத்த ஒப்பந்தம், பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டேவும் இந்தியா கூறியதால்தான் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தோம் என்று கூறியதால், காங்கிரஸ் கட்சி பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேராவின் நண்பர் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்காத காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி கொதிக்கிறது.

சர்வதேச அளவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேயின் உதவியுடன் ரபேல் ஒப்பந்தத்தைச் சிதைக்கத் துணிந்துள்ளனர் என்று பாஜகவினர் குற்றம் சாட்டினார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று டெல்லியில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''ரபேல் போர் விமானக் கொள் முதலில் நடந்த ஊழல் குறித்து கேள்வி எழுப்பினால் பாஜகவினர் சேற்றை வாரி இறைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது, அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்கு நாங்கள் ஒப்பந்தம் கொடுத்தோம். ஆனால், பிரதமர் மோடி அனில் அம்பானியின் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்தார்.

கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஒப்பந்தப் புள்ளி கொடுத்து, 2014, மார்ச் 13-ம் தேதி ஒப்பந்தப் புள்ளி திறந்து நாங்கள் மத்திய அரசின் ஹெச்யுஎல் நிறுவனத்துக்கு அளித்தோம். ஆனால், மோடி அரசு ஹெச்யுஎல் நிறுவனத்துக்குக் கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்ததது.

இது குறித்து நாங்கள் காரணம் கேட்டால், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் தவறான வார்த்தைகளையும், சேற்றை வாரி இறைக்கும் பேச்சுகளையும் பேசுகிறார்கள்.

இந்த நாடு அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற கதையைக் கேட்டிருக்கிறது, ஆனால், தற்போது, மோடியும், 40 சகாக்களும் ரபேல் ஊழலுக்குப் பதில் அளிக்கப் போகிறார்கள். பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா? அல்லது அம்பானிக்குப் பிரதமரா?''

இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நண்பர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்காத காரணத்தால், காங்கிரஸ் கட்சி ரபேல் போர்விமான ஒப்பந்தத்தை முறிக்கச் சதித்திட்டம் தீட்டுகிறது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x