Published : 10 Sep 2018 08:57 PM
Last Updated : 10 Sep 2018 08:57 PM

ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு: இருவருக்கு மரண தண்டனை; ஒருவருக்கு ஆயுள் சிறை

கடந்த 2007-ம் ஆண்டில் ஹைதராபாத்தில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனிக் சபிக் சயீத் மற்றும் முகமது அக்பர் இஸ்மாயில் சவுத்ரி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

3-வது குற்றவாளி தாரிக் அஞ்சுமுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2-வது கூடுதல் செசன்ஸ் நீதிபதி டி. சீனிவாச ராவ் உத்தரவிட்டார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரு இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

இந்தத் தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேரும் திறந்தவெளி திரையரங்கம் அருகே 12 பேரும் என மொத்தம் 44 பேர் கொல்லப்பட்டனர், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து ஹைதரபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இன்னும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை செரப்பள்ளி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை நடந்து முடிந்த நிலையில், கடந்த 4-ம் தேதி நீதிபதி சீனிவாச ராவ் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த அனிக் சபிக் சயீத் மற்றும் முகமது அக்பர் இஸ்மாயில் சவுத்ரி இவர்களுக்கு அடைக்கலம் அளித்த தாரிக் அஞ்சும் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் அறிவித்து, 10-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதேசமயம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பரூக் சப்ருதீன் தர்காஷ், முகமது சதீக் இஸ்ரர் அகமது சேக் ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை நீதிபதி விடுவித்தார். அதேசமயம் இவர்கள் இருவரும் புனே, மும்பை வழக்குகளில் தொடர்பில் உள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை விவரங்களை நீதிபதி சீனிவாச ராவ் அறிவித்தார். இதில் அனிக் சபிக் சயீத் மற்றும் முகமது அக்பர் இஸ்மாயில் சவுத்ரி ஆகியோருக்கு மரண தண்டனையும், இவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தாரிக் அஞ்சுமுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார்.

இதில் அனிக் சபிக், அக்பர் ஆகிய இருவரும் புனே நகரைச் சேர்ந்தவர்கள். தாரீக் அஞ்சும் பீகாரைச் சேர்ந்தவர் என்றாலும் டெல்லியில் பொறியியல் பட்டம் பெற்று அங்கேயே தங்கியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x