Published : 19 Sep 2018 05:01 PM
Last Updated : 19 Sep 2018 05:01 PM

இந்திய வீரரின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்: எல்லையில் பதற்றம்

காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு, இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்தநிலையில், சர்வதேச எல்லையான ராம்கார்க் பகுதியில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் நரேந்திர குமாரை, பாகிஸ்தான் வீரர்கள் அடித்து உதைத்து, அவரது தொண்டை பகுதியை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இறந்தவரின் உடலில் துப்பாக்கி குண்டுகளால் துளைத்துள்ளனர். பின்னர் அவரது உடலை இந்திய பகுதிக்குள் தூக்கி எறிந்துவிட்டு ஓடி விட்டனர்.

நரேந்திர குமார் காணாமல் போன தகவல் கிடைத்த உடனேயே எல்லை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உயிரிழந்த நிலையில் நரேந்திர குமாரின் உடலை மீட்டுள்ளனர். ராணுவ வீரரின் மார்பு பகுதி, கால் பகுதியில் குண்டு காயம் உள்ளது. அவருடைய கழுத்து பாதி அறுப்பட்ட நிலையில் இருந்துள்ளது, அவருடைய உடல் முழுவதும் கத்தியால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் உள்ளன.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த கொடூர கொலையால் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு எல்லை பாதுகாப்பு படையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என்பதால் பாகிஸ்தான் ராணுவமும் உஷார் நிலையில் உள்ளது. இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x