Published : 27 Jun 2019 04:51 PM
Last Updated : 27 Jun 2019 04:51 PM
தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழு, 2016-ல் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவு தனது முழுமையான அறிக்கையை மே 31-ல் சமர்ப்பித்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை வெளியிட்டிருக்கும் மத்திய அரசு, ஜூன்-30 வரை பொதுமக்கள் கருத்து கூறலாம் என அறிவித்துள்ளது. மும்மொழிக் கொள்கை, கட்டாய இந்தி மொழி என உடனடியாக சர்ச்சை கிளம்ப, அந்தப் பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, வேறு சில அம்சங்கள் தொடர்பாகவும் விவாதங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களைவியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும். ஜூலை 31-ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசனை செய்தபிறகே, தேசிய கல்விக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் தரும் பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT