Published : 26 Jun 2019 12:00 PM
Last Updated : 26 Jun 2019 12:00 PM
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ 3 நாட்கள் பயணமாக நள்ளிரவு இந்தியா வந்தார். அவர் , இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ 3 நாட்கள் பயணமாக நேற்று நள்ளிரவு புதுடெல்லி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இன்று நண்பகலில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் மைக் பாம்பியோ சந்தித்துப் பேசுகிறார். அப்போது மைக் பாம்பியோவுக்கு, அமைச்சர் ஜெய்சங்கர் மதிய விருந்து அளிக்கிறார்.
இந்த சந்திப்புக் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், " அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாடுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றி, ராஜாங்க ரீதியான உறவுகளை வலுப்படுத்துவோம். இந்தியா, அமெரிக்க நட்புறவுகள், வர்த்தக உறவுகள் உள்ளிட்டபல்வேறு விஷயங்களை பிரதமர் மோடியுடன், மைக் பாம்பியோ பகிர்ந்து கொண்டார். ஜப்பானில் நடைபெறும் ஜி20ஒசாகா மாநாட்டில் அதிபர் டிரம்பைச் சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார் " எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வருகை குறித்து வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், " ரஷியாவுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ள நிலையில், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணையை வாங்குவது தொடர்பாகவும், ரஷியாவின் உறவு குறித்தும் பேசப்படும். .
இதுதவிர தீவிரவாதத்தை ஒழிப்பது, ஹெச்-1பி விசா விவகாரம், வர்த்தக உறவுகள், குறிப்பாக ஈரான் நாட்டிடம் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க விதித்துள்ள தடையால் ஏற்பட்டுள்ள பதற்றம் ஆகியவை குறித்து அமைச்சர் ஜெய்சங்கர், மைக் பாம்பியோ இருவரும் ஆலோசிப்பார்கள் " என தெரிவிக்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து உயர் பதவியில் இருந்து ஒருவர் வந்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்துவது இதுதான் முதல் முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT