Published : 08 Jun 2019 03:19 PM
Last Updated : 08 Jun 2019 03:19 PM
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியை விட எங்களுக்கு அதிகமான எம்எல்ஏக்கள் இருப்பதால் எங்கள் கட்சியை அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக சட்டப்பேரவை சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.
119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதன் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் ஆளும் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பலம் 18 ஆகக் குறைந்தது.
இந்தநிலையில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைய முடிவெடுத்தனர். சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியை சந்தித்துப் பேசிய 12 எம்எல்ஏக்களும் தெலங்கானா காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமதியில் இணைத்து விட்டதாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரபூர்வ எதிர்க்கட்சி எந்த அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கும் சூழல் உள்ளது.
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவுக்குத் தனிப்பெரும் செல்வாக்கு இருந்தாலும் தலைநகர் ஹைதராபாத்தில் ‘ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேதுல் முஸ்லிமீன்’ (ஏஐஎம்ஐஎம்) கட்சி தனிபெரும் செல்வாக்குடன் உள்ளது. அந்த கட்சிக்கு ஏழு சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.
இதனால் அடுத்த பெரிய கட்சியான தங்களை எதிர்க்கட்சியாக அறிவிக்க வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘காங்கிரஸை விட எங்கள் கட்சிக்கு அதிகமான எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் பதவி எங்களுக்கு வழங்கப்பட வேண்டும். தெலங்கானா சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து விரைவில் கோரிக்கை விடுப்போம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT