Published : 09 Jun 2019 07:20 PM
Last Updated : 09 Jun 2019 07:20 PM
மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய தொழிலதிபரும் பாஜக எம்எல்ஏவுமான சஞ்சய் பட்நாயக்குக்கு சொந்தமான சுரங்கங்களை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூர் மாவட்டத்தில் 100க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் இருந்த காட்டை நாசம் செய்து சுரங்கம் தோண்டியதாக பாஜக எம்எல்ஏ சஞ்சய் பட்நாயக் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சிகோரா பகுதியில் அமைந்துள்ள இச்சுரங்கங்கள் முழுவதும் வனப்பிரதேசத்திற்கு சொந்தமானவை எனவும் காட்டில் சுரங்கம் தோண்டப்பட்டு வர்த்தகப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கப்பட்டு வருவதாகவும் இந்தச் சுரங்கங்களை உடனடியாக மூடுமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேச வனத்துறை மனு செய்திருந்தது.
அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாவட்ட நிர்வாகம் ஆறுபேர் குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்து அறிக்கை ஒன்றினை கடந்த மாதம் சமர்ப்பித்தது.
அறிக்கையை சரிபார்த்தபிறகு மீண்டும் விசாரணையை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் 52 ஹெக்டேரில் பரந்து விரிந்துள்ள இரண்டு சுரங்கங்களுக்கும் உடனே சீல் வைக்குமாறு மாவட்ட அதிகாரி பாரத் யாதவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) வழங்கிய தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.
பட்நாயக் முன்பு காங்கிரஸில் இருந்தவர். பின்னர் கட்சியிலிருந்து விலகினார். பாஜகவில் இணைந்த பிறகு சிவராஜ் சிங் சவுகான் அரசில் அமைச்சராக பணியாற்றினார். தற்போது அவர் பாஜக எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT