Published : 05 Jun 2019 10:56 AM
Last Updated : 05 Jun 2019 10:56 AM
உ.பி. இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் ஆகியோர் கூறியதைத் தொடர்ந்து, ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியும் தனித்துக் களமிறங்க முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் வென்றது. 62 தொகுதிகளை ஆளும் பாஜக கைப்பற்றியது.
உத்தரப் பிரதேசத்தில் எம்எல்ஏக்களாக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த 9 பேர் எம்.பி.க்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோலவே சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளனர்.
இதனால் ஏற்பட்டுள்ள 11 காலி இடங்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மாயாவதியும், அகிலேஷ் யாதவும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த சூழலில் மெகா கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி தாங்களும் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநில ஆர்எல்டி கட்சியின் தலைவர் மசூத் அகமது லக்னோவில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் தங்களின் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்துவிட்டார்கள். எங்களின் கட்சியும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. ஆனால், மெகா கூட்டணி உடைந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.
எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் தலைவர் அஜித் சிங், ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இணைந்து முடிவெடுப்பார்கள். இதுதொடர்பாக அடுத்த சில நாட்களில் ஆலோசிக்கப்படும்.
எங்களின் மெகா கூட்டணியில் எந்தவிதமான பிளவும் இல்லை. தேசிய அளவில் கூட்டணி தொடர்கிறது. எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்று பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியாக உருவெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் முசாபர்நகர் தொகுதியில் அஜித் சிங்கும், அவரின் மகன் ஜெயந்த் சவுத்ரி பாக்பத் தொகுதியிலும் தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT