Published : 13 Mar 2018 08:02 PM
Last Updated : 13 Mar 2018 08:02 PM
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி செய்வதில் அரசுக்கு உடன்பாடு இல்லை, அதற்கு ஆதரவும் அளிக்கமாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் விவசாயிகளின் துயர் துடைக்க பல்வேறுநடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. குறிப்பாக அவர்களின் கடன் சுமையைக் குறைக்க அவர்களுக்கு எளிதாக வங்கியில் கடன் கிடைக்க வழி செய்துள்ளோம்.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளிப்பதில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை. அதற்கு ஆதரவும் அளிக்காது. கடன் தள்ளுபடி அளிப்பது என்பது, கடன் வழங்குவதிலும், அதை மீட்பதில் எதிர்மறையான விளைவுகளையும், சில பின்விளைவுகளையும் ஏற்படுத்தும்.
கடந்த 2006-07-ம் ஆண்டு முதல் விவசாயிகளின் கடன்சுமையைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை பயிர்க் கடன் அளித்தோம், கடனை முறையாகக் கட்டும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி அளித்தோம்.
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின் விவசாயிகள் எந்தவிதமான சிரமங்களையும் எதிர்கொள்ளவில்லை. தங்கள் விளைபொருட்களை சந்தையில் விற்பதிலும் எந்த இடர்ப்பாடுகளையும் அவர்கள் சந்திக்கவில்லை. அதேபோல தயாரிப்பாளர்களுக்கும், சில்லரை விற்பனையாளர்களுக்கும் நேரடியாக லாபம் சென்றது என்ற குற்றச்சாட்டும் இல்லை.
இவ்வாறு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT