Published : 30 Mar 2018 09:14 AM
Last Updated : 30 Mar 2018 09:14 AM
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெங்களூரு மாநகருக்கென்று தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக, மஜத ஈடுபட்டுள்ளன.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுவதால் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. கட்சிகளின் தலைமை நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வு, பிரச்சார பொதுக்கூட்டம், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவுக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் அதே வேளையில்,பெங்களூருவுக்கு தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளையும் கட்சிகள் தொடங்கியுள்ளன.
கர்நாடக தலைநகரான பெங்களூருவில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 20 சதவீத வாக்காளர்களே கர்நாடகாவின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். மாநிலத்தின் பிற பகுதிகளை சேர்ந்த ஏராளமான வாக்காளர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இந்த வாக்காளர்களைக் கவர்ந்தால், மாநில அளவில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே பெங்களூரு மாநகர வாக்காளர்களை கவர காங்கிரஸ், பாஜக, மஜத முடிவெடுத்துள்ளன.
கடந்த 2013 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெங்களூருவுக்கு என தனியாக 18 பக்க தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இதே பாணியில் இந்த தேர்தலிலும் பெங்களூருவின் போக்குவரத்து பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு, குப்பை பிரச்சினை ஆகியவற்றுக்கு தீர்வு காணப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்படும் என தெரிகிறது. இதேபோல பாஜக, மஜத கட்சிகளும் பெங்களூருக்கு தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT