Published : 03 Mar 2018 08:59 AM
Last Updated : 03 Mar 2018 08:59 AM

தாயின் வேண்டுகோளை ஏற்று வீடு திரும்பிய தீவிரவாதி

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயின் வேண்டுகோளை ஏற்று நேற்று வீடு திரும்பினார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்ட 4 இளைஞர்கள், மனமாற்றம் ஏற்பட்டு வன்முறையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்தனர்.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி அம்மாநில சட்ட மேலவையில் கடந்த மாதம் பதில் அளிக்கும்போது, “தவறாக வழிகாட்டப்பட்ட 4 இளைஞர்கள் வன்முறையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்தனர். தீவிரவாதிகளின் குடும்பத்தினருடன் பேசி, அவர்கள் தங்கள் குழந்தையை மனமாற்றம் அடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் டிஜிபி எஸ்.பி. வைத் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேலும் ஒரு இளம் மாணவர் தனது தாய் கண்ணீர்மல்க விடுத்த வேண்டுகோளை ஏற்று வன்முறையை கைவிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். அக்குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

சரண் அடைந்த அந்த மாணவரைப் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. அம்மாணவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இத்தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

முதல்வர் மெகபூபா முப்தி கடந்த மாதம் கூறும்போது, “இளைஞர்கள் தீவிரவாதப் பாதையில் செல்வதை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சி அளிப்பதற்காக காவல் நிலைய அளவில் இளைஞர் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகின்றன” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x