Last Updated : 30 Sep, 2014 06:23 PM

 

Published : 30 Sep 2014 06:23 PM
Last Updated : 30 Sep 2014 06:23 PM

ஐ.எஸ்-ஸுக்கு எதிராக அமெரிக்காவுக்கு மோடி ஆதரவு தரக் கூடாது: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு ஆதரவு அளித்து, அவர்களின் நோக்கத்துக்கு இந்தியா உடன்படும்படி நடக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

சிரியா மற்றும் இராக்கில் போரிட்டு வரும் சன்னி பிரிவு ஆதரவு உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் அமைப்பான ஐ.எஸ். தாக்குதல்களின் மூலம் அங்கு இயல்பான சூழல் ஏற்படாத நிலையை உருவாக்கி உள்ளது. கிளர்ச்சி அமைப்பிற்கு எதிராக, அமெரிக்கா மனித உரிமைகள் ரீதியான தாக்குதல்களை நடத்தியும், உள்நாட்டு ராணுவத்துக்கு போர் பயிற்சியும் அளித்து வருகிறது.

அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. 20-க்கும் அதிகமான நாடுகள், தாக்குதலில் அமெரிக்காவுக்கு துணை நிற்பதாகவும், ஆயுதங்கள், நிதி போன்ற பல்வேறு வகையில் உதவுவதாகவும் தெரிவித்துள்ளன.

ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப் பயணத்தின் பகுதியாக திங்கள்கிழமை இரவு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சுமார் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சின்போது மேற்கு ஆசிய நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், மோடியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தை பயன்படுத்தி, ஆதரவு கோர நினைக்கும் அமெரிக்காவின் எண்ணத்துக்கு இந்தியா உடன்பட கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் தருணத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிரான போரில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு அந்நாடு முயற்சிக்கலாம்.

எந்தச் சூழலிலும் அந்நாட்டின் வலையில் நாம் இரையாகிவிடக் கூடாது. இதனை நமது அரசு மனதில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக மனிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் இணைய வேண்டும் என்பது போன்ற அவர்களின் தந்திரமான பேச்சுக்கு நாம் உடன்பட்டுவிடக் கூடாது.

ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக எந்த சர்வதேச நாடு அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தாலும், அந்த நாடு ஐ.நா-வின் ஒப்புதலை பெற்றாக வேண்டும். அதனை மீறி செயல்படும் நாடு நீதிக்கு எதிராக செயல்படுவது போலாகும்" என்று அந்த கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x