Published : 18 May 2019 12:55 PM
Last Updated : 18 May 2019 12:55 PM
மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து 142 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று 1.5 கோடி மக்களிடம் நேரடியாக ஆதரவு திரட்டியதாக பாஜக தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. நாளை 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன. 7-ம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. பின்னர் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் நேற்று கூட்டாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான தகவல்களை அமித் ஷா கூறினார். சுதந்திரத்துக்கு பிறகு எந்த ஒரு தலைவரும் ஒரு தேர்தலில் பிரச்சாரம் செய்ததை விடவும் பிரதமர் மோடி கூடுதலாக பிரச்சாரம் செய்ததாக அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான விவரங்களை பாஜக தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மார்ச் மாதம் 28-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பிரதமர் மோடியின் முதல் பிரசாரம் தொடங்கியது.
தொடர்ந்து ஐம்பது நாளுக்குப் பிறகு மத்தியப் பிரதேச மாநிலத்தின் கார்கோனில் நேற்று தன் இறுதிப் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
இந்த ஐம்பது நாட்களாக பிரதமர் மோடி 142 பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் கலந்துகொண்டுள்ளார்.
நாடு முழுவதும் அவரது பிரச்சாரக் கூட்டங்களில் சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி 1.5 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி, 10,000 பாஜக மூத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT