Published : 26 Apr 2019 12:00 AM
Last Updated : 26 Apr 2019 12:00 AM

தேர்வு முடிவுகளில் குளறுபடி: தெலங்கானாவில் காங்கிரஸ் போராட்டம்

தெலங்கானாவில் இன்டெர்மீடியட் முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு தேர்வை சுமார் 9.5 லட்சம் மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 18-ம் தேதி வெளியாகின. இதில் பெருமளவு மாணவர்கள் தோல்வி அடைந்தனர். தேர்வு முடிவுகளை தனியார் மென்பொருள் நிறுவனம் கையாண்டதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்வில் தோல்வி காரணமாக இதுவரை சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால் மாணவர் அமைப்பினர் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்வு முடிவு குளறுபடிகள் தொடர்பாக தெலங்கானாவில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் வாரங்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது விஜயசாந்தி பேசும்போது, “முதல்வர் சந்திரசேகர ராவ் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். தேர்வு முறைகேடுகளை வெளியுலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இல்லையேல் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட விஜயசாந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே தேர்வு குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்த தனிக் குழுவை முதல்வர் சந்திரசேகர ராவ் அமைத்துள்ளார். மேலும் கட்டணமின்றி விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x