Published : 14 Apr 2019 11:42 AM
Last Updated : 14 Apr 2019 11:42 AM
ரயில்வே காத்திருப்போர் அறையையும் விட்டுவைக்காத திருடர்கள் டெல்லி பயணிகளிடம் தங்கள் கைவரிசையைக் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 34 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் பயணத்தில் பாதுகாப்பு தேவைப்படும் நிலையில் தற்போது காத்திருப்போர் அறைக்கும் பாதுகாப்பு தேவை என்கிற நிலை உருவாகி வருகிறது. இதை நிரூபிக்கும் கொள்ளைச் சம்பவம் ஒன்று டெல்லியில் சில தினங்களுக்கு முன் நடந்தது.
உத்தரப் பிரதேசத்தின் கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராம்ஜி என்பவர் (34), டெல்லி ரயில்வே ஸ்டேஷன் காத்திருப்போர் அறையில் சந்தேகப்படும் நிலையில் பயணிகளைக் குறிவைத்து நீண்டநேரமாக வருவதும் போவதுமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்த ரூ.65 ஆயிரம் பணமும் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏப்ரல் 6 அன்று பயணி ஒருவர் தனது மனைவியுடன் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அறையில் நுழைந்தார். பின்னர் ஓய்வறைக்குள் சென்று திரும்புவதற்குள் அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணமும் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தார்.
நேற்று மாலை ராம்ஜி கைது செய்யப்பட்டதற்குப் பிறகு சோதனைகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இனி அவ்வப்போது பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் ரயில்வே போலீஸ் துணை ஆணையர் தினேஷ் குமார் குப்தா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT