Published : 12 Apr 2019 12:00 AM
Last Updated : 12 Apr 2019 12:00 AM

ஆந்திர சபாநாயகர், வேட்பாளர் மீது தாக்குதல்

ஆந்திர மாநில தேர்தலில் நேற்று பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் இருவர் கொலை செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலத்தில் ஒரே கட்டமாக 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையினர், போலீஸார், ஊர்காவல் படையினர் மற்றும் வெளிமாநில போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்குள்ள வாக்குச் சாவடிகளில் மாலை4 மணி வரையிலும் மற்ற இடங்களில் மாலை 5 மணி வரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஆனால் பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் அந்த மையங்களில் மாலை 6 மணி வரை வரிசையில் நின்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் 381 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடங்களில் கோளாறு சரிசெய்யப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

இதனிடையே அனந்தபூர் மாவட்டம், குந்தக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா ஆத்திரமடைந்தார். அவர் வாக்குப் பதிவு இயந்திரத்தை கீழே போட்டு உடைத்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அனந்தபூர் மாவட்டம், தாடிபத்ரி மீராபுரம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பாஸ்கர் ரெட்டி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுபோல் சித்தூர் மாவட்டம், சதம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர். ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகர் கோடல சிவப்பிரசாத், நேற்று குண்டூர் மாவட்டம், இனிமெட்டு பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு செல்லும்போது அவரது கார் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து அங்கு இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சபாநாயகர் தாக்கப்பட்டு அவரது சட்டை கிழிக்கப்பட்டது. இதனால் சில மணி நேரம் அங்கு பதற்றம் நிலவியது.

இதே மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் னிவாச ரெட்டியின் கார் மீது தாக்குல் நடத்தப்பட்டது. இதில் அவர் காயமடைந்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் அமராவதி பகுதியில் உள்ள உண்டவல்லி கிராமத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி,கடப்பா மாவட்டம், புலிவேந்தலாவில் வாக்களித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x