Published : 09 Apr 2019 10:34 AM
Last Updated : 09 Apr 2019 10:34 AM
பாஜகவின் தேர்தல் அறிக்கை குறுகிய நோக்கம் , அகங்காரம் கொண்டதாக, தனிமைப்படுத்தப்பட்ட மனிதரின் குரலாக இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது, வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் செவ்வாய்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், பாஜக நேற்று தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதில் சட்டவிரோதமாக அகதிகள் குடியேறுவதைத் தடுக்கும் வகையில் என்ஆர்சி சட்டத்தை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்துவோம் என்றும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டத்தை ரத்து செய்வோம், முத்தலாக் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவோம், அயோத்தியில் கோயில் கட்டுவோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். அதில் " காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, விரிவான ஆலோசனை, கலந்தாய்வுக்குப்பின் உருவாக்கப்பட்டது. லட்சக்கணக்கான இந்திய மக்களின் குரலாகவும், எண்ணங்கள், சக்தியின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.
ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கை, மூடப்பட்ட அறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்படுத்த மனிதனின் குரலாக, குறுகிய நோக்கம் கொண்டதாக, அகங்காரம் கொண்டதாக இருக்கிறது " எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாஜகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, " பாஜகவின் தேர்தல் அறிக்கை ஏமாற்று அறிக்கை, பொய்களின் குமிழ்கள். தேர்தல் அறிக்கைக்கு பதிலாக மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டு இருக்கலாம் " எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT