Published : 31 Mar 2019 07:02 AM
Last Updated : 31 Mar 2019 07:02 AM
வரும் மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
காந்திநகர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான எஸ்.கே.
லங்காவிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக அகமதாபாத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நான் சென்றபோது, நாட்டை வழிநடத்த மோடியின் பெயரையே மக்கள் முழங்குவதை பார்த்தேன். தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டை வழிநடத்தப்போவது யார் என்ற அடிப்படையிலேயே வரும் மக்களவைத் தேர்தல் நடைபெறும்.
இமாச்சலில் இருந்து கன்னியாகுமரி வரை, காம்ரூப் நகரில் இருந்து காந்தி நகர் வரை மக்களிடம் இந்தக் கேள்வியை நான் கேட்டேன். அப்போது மோடி, மோடி என்ற முழக்கத்தையே நான் கேட்டேன்.
இதற்கு முன் காந்திநகர் தொகுதியிலிருந்து எல்.கே.அத்வானி, வாஜ்பாயி, புருஷோத்தம் கணேஷ் மாவலங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இத்தொகுதியில் போட்டியிடுவதை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.
இவ்வாறு அமித்ஷாபேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT