Published : 03 Mar 2019 03:26 PM
Last Updated : 03 Mar 2019 03:26 PM
தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் பணியில் நமது வீரர்கள் பரபரப்பாக இயங்குகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளோ வீரர்களின் துணிச்சலுக்கும், வீரத்துக்கும் ஆதாரங்கள் கேட்கிறது என்று பிரதமர் மோடி காட்டமாகப் பேசினார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தி, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களையும், ஏராளமான தீவிரவாதிகளையும் அழித்துவிட்டுத் திரும்பினர்.
ஆனால், இந்தத் தாக்குதல் உண்மையில்லை என்று பல சர்வதேச ஊடகங்கள் தெரிவித்ததால், தாக்குதலுக்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.
பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பாஜக சார்பில் சங்கல்ப் பேரணி இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
''தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் பணியில் நமது வீரர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளோ நமது வீரர்களின் வீரத்துக்கும், துணிச்சலுக்கும் ஆதாரங்களைக் கேட்கின்றன.
பாகிஸ்தான் மீது நமது விமானப்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் கேட்பது, பாகிஸ்தானை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும்.
தேசம் முழுமையும் ஒரே குரலில் பேசும்போது, 21 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கூடி, எங்களைக் கண்டித்தார்கள். விமானத் தாக்குதல் நடத்திய வீரர்களின் துணிச்சலுக்கு ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றார்கள்.
எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக மிகப்பெரிய சதி செய்கின்றன. நான் தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட முயலும்போது, எதிர்க்கட்சிகள் என்னை ஒழிக்க சதி செய்கிறார்கள்.
எல்லையில் எதிரிகளுடன் நமது வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, இங்கு உள்நாட்டில் சிலர் பாகிஸ்தானிடம் கனிவுடன் கோரிக்கை வைக்கிறார்கள். இது புதிய இந்தியா. வீரர்களைப் பலிகொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்க மாட்டோம். அமைதியாக இருக்க மாட்டோம்.
பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகியோர் மக்களுக்குத் தேவையான பல திட்டங்களைச் செய்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்கும்.
பிஹார் மாநிலத்தில் சாலை அமைப்பு, ரயில்வே, விமானப் போக்குவரத்து, அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்வோரின் எண்ணிக்கையை அதிகரித்து வழங்கிய சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT